சேதமடைந்த பாலத்தால் பொதுமக்கள் அவதி
நரிக்குடி அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த பாலம்
நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருஞ்சிறை கிராமத்தில் காலனி பகுதியிலுள்ள பாலமானது மிகவும் சேதமடைந்து உள்ளது. இரவு நேரங்களில் நடந்து மற்றும் வாகனங்களில்செல்லும் பொதுமக்கள் பாலத்திற்குள் தவறிவிழும் சூழ்நிலை நிலவுகிறது. இருஞ்சிறை காலனி பகுதிக்குள் செல்லும் சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த சாலை வழியாக தான் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மற்ற பகுதிகளுக்கு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையை மக்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
பொதுமக்கள் அவதி
இருஞ்சிறை மயானப்பாதைக்கும் இந்த வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது. யாராவது இறந்தால் பிணத்தை தூக்கிக்கொண்டு செல்வதற்கு கூட சிரமமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு பாலத்தினுள் வாகனங்கள் விழும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.