கடல் பகுதியில் மணல் திட்டை அகற்றிஆழப்படுத்த வேண்டும்

ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தின் கடல் பகுதியில் மணல் திட்டை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-29 19:09 GMT

மீனவர்கள் சிரமம்

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தளம் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு அந்த இடம் மேடாக ஆகிவிட்டது.

இதனால் மீனவர்கள் தங்கள் படகினை கரையில் கட்டி விட்டு மீண்டும் கடலுக்குள் திரும்ப போகும் போது கடல் நீர் சில நேரங்களில் உள்வாங்குகிறது. இதனால் கரையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மணல் திட்டை அகற்ற வேண்டும்

இங்கு மணல் திட்டு இருப்பதால் பிடித்துவரப்பட்ட மீன்களை மீன்பிடிதளத்தில் நேரடியாக கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் நாட்டுபடகு மூலம் விசைப்படகு இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து மீன்களை ஏற்றி கரைக்கு கொண்டு வரும் அவல நிலை ஏற்படுகிறது.

இது குறித்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை அதனை அரசு கண்டுக் கொள்ளவும் இல்லை, நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அங்குள்ள மணல்திட்டை அகற்றி அந்த பகுதியை ஆழப்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்