உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதி

பூம்புகார் அருகே தர்மகுளம் கடைவீதியில் உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2023-07-14 19:15 GMT

திருவெண்காடு,

பூம்புகார் அருகே தர்மகுளம் கடைவீதியில் உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

உயர்கோபுர மின்விளக்கு

பூம்புகார் அருகே தர்மகுளம் கடைவீதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், இந்த இடத்தில் பஸ்களில் இருந்து இறங்கி செல்கின்றனர். இந்த கடைவீதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி உயர் கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டது.

பழுது நீக்க கோரிக்கை

ஆனால் சில மாதங்களே எரிந்து வந்த நிலையில் திடீரென பழுதடைந்து விட்டது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த உயர்மின் கோபுர விளக்கு செயல்பட்டு வந்ததால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்பட்டது. ஆனால் தற்போது உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து காட்சி பொருளாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் மின் கோபுர விளக்கில் பழுதை நீக்கி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்