நிலம் அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி குடும்பத்துடன் சாலை மறியல் மயிலம் அருகே பரபரப்பு

மயிலம் அருகே நிலம் அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.

Update: 2022-05-28 17:07 GMT

மயிலம்,

மயிலம் அருகே சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் வீட்டுமனை உள்ளது. இந்த மனையை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் போலி பத்திரம் தயாரித்து, அபகரித்து, அங்கு வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏழுமலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நில அபகரிப்பு பிரிவிலும், மயிலம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். அந்த புகார் மீது இதுவரைக்கும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை அவரது குடும்பத்தினருடன் நேற்று காலை ஜக்காம் பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்