கல்வி, விவசாயம், வணிகக்கடன் பெற தனி இணையதளம்-பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருக்குறளுடன் தொடங்கிய நிதி அமைச்சக வாரவிழாவில், கல்வி, விவசாயம், வணிகக்கடன் பெற தனி இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-06 20:19 GMT

மதுரை

திருக்குறளுடன் தொடங்கிய நிதி அமைச்சக வாரவிழாவில், கல்வி, விவசாயம், வணிகக்கடன் பெற தனி இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அரசு திட்டங்கள்

சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பாக தனித்துவமான (ஐகானிக்) வார கால கொண்டாட்டம் நேற்று தொடங்கியது.

இதற்கான விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலை வகித்தார். பிரதமர் மோடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த விழாவில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அந்த வீடியோவின் தொடக்கத்தில் திருவள்ளுவர் புகைப்படத்துடன், "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே, ஒப்புரவின் நல்ல பிற," என்ற திருக்குறள் வாசிக்கப்பட்டது.

இந்த குறளுக்கு, வானத்திலும், பூமியிலும் மனித குலத்திற்கு சேவை செய்வதை விட சிறந்த செயலை கண்டுபிடிப்பது கடினம் என்று ஆங்கிலத்தில் விளக்கம் தரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் திட்டங்கள் ஒளிப்பரப்பட்டன.

இணையதளம்

டெல்லியில் நடந்த இந்த விழாவை மதுரை உள்பட 75 நகரங்களில் காணும் வகையில் காணொலி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மதுரை ஜே.சி.ரெசிடன்சி ஓட்டலில் வருமானவரித்துறை சார்பாக காணொலி காட்சி ஒளிப்பரப்பட்டது.

அதில் வருமானவரித்துறை முதன்மை ஆணையர் சீமாராஜ் கலந்து கொண்டார். மேலும் வருமானவரித்துறை, வணிகவரித்துறை, சுங்கத்துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் முக்கியமாக, https://www.jansamarth.in/ என்ற இணையதளத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 7 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மத்திய அரசின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தகுதிக்கேற்ப உடனடி கடன் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கிகள் உள்பட 125 கடன் வழங்குபவர்களிடம் இருந்து உடனடியாக டிஜிட்டல் ஒப்புதலை பெற முடியும். தற்போது கல்விக்கடன், வேளாண்மை உள்கட்டமைப்பு கடன், வாழ்வாதார கடன் மற்றும் வணிகக்கடன் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் மானியத்துடன் உடனடியாக இந்த இணையதளத்தில் ஒப்புதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்