சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக "ஸ்கைலைட் சிஸ்டம்" அறிமுகம்

சென்னை விமானநிலையத்தின் அதிநவீன ஒருங்கிணைந்த முனையங்களில் இயற்கையாக சூரிய ஒளி கிடைக்கும் வகையில் "ஸ்கைலைட் சிஸ்டம்" முதல் முறையாக அமைக்கப்படுகிறது.

Update: 2022-05-23 06:56 GMT

சென்னை:

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் செலவில், உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன புதிய விமான முனையங்கள் கட்டும் பணி கடந்த 2018 செப்டம்பரில் துவங்கியது.

2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த புதிய முனையங்கள் வேலை கடந்த 2021ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடா்ச்சியான ஊரடங்கு, நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னை விமானநிலையத்தில் ஓர் ஆண்டிற்கு கையாளப்படும் பயணியர்களின் எண்ணிக்கை சுமார் 1.7 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அதற்கு தகுந்தாற்போல் இந்த புதிய முணையம் கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய அதிநவீன முனையத்தில் மொத்தம் 5 தளங்கள் உள்ளன. தரை தளத்தில் சர்வதேச பயணியர் வருகைக்கான நடைமுறைகளும், இரண்டாவது தளத்தில் பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் ஓய்வு அறைகள், விவிஐபிகள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட பல்வேறு கூடுதல் வசதிகள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக, 'ஸ்கைலைட் சிஸ்டம்' எனும் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்கான பிரத்யேக வடிவமைப்புகள் அமைக்கப்படுகின்றன. 6 மீட்டர் வட்ட வடிவில் 10 க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சூரிய வெளிச்சம் நேரடியாக விமானநிலையத்தின் உள்பகுதிக்கு வருவது போல் அமைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் சூரிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும். வெப்பத்துடன் கூடிய புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் திறனும் இதில் உள்ளது. அந்த சிஸ்டத்திற்கு மேலும் கீழுமாக 2 பகுதிகளிலும் சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்படுகின்றன.அவைகள் சூரிய ஒளியை பில்டா் செய்து, வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும். வெப்பத்தை தடுத்து நிறுத்தும்.

இதனால் இந்த புதிய அதிநவீன முணையங்கள் நல்ல வெளிச்சங்களுடன், காற்றோட்டவசதியாகவும் இருக்கும். அதே நேரத்தில் மின்சார செலவும் கணிசமான அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையங்களில் சுமாா் 80 சதவீதம் வேலைகள் முடிக்கப்பட்டு, துரிதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2023 தொடக்கத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்