விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் கைது

விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-11-16 18:45 GMT


விழுப்புரத்தை அடுத்த தும்பூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று மாலை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் தும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 50 கிலோ எடை கொண்ட 60 சாக்கு மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அந்த சரக்கு வாகன டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 43) என்பதும், இவர் தும்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்