ராமேசுவரம்-இலங்கை தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து

ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதியில் இருந்து இலங்கை தலைமன்னார் பகுதிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Update: 2022-07-14 17:03 GMT


ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதியில் இருந்து இலங்கை தலைமன்னார் பகுதிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இது தொடர்பாக ராமநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தலைமன்னாருக்கு கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் பகுதியில் 10 மீட்டர் அளவிற்கு கடல்பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தினால் சிறிய, வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக இருக்கும். இதுதொடர்பாக மத்திய மந்திரியிடம் சாகர்மாலா திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கி தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர் சம்மதம் தெரிவித்துள்ளதால் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ராமேசுவரம் அருகில் அரிச்சல் முனை பகுதியில் கார் பார்க்கிங், கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் சாலையை விரிவுபடுத்தி புதிய ஜெட்டி(மீன்பிடி இறங்கு தளம்) கட்டி அங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

2 மணி நேரத்தில் இந்த பயணம் முடியும் வகையில் உள்ளது. இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டமதிப்பீடு தயார் செய்து டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் பேசி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் ஒத்துழைப்பை பொறுத்து இந்த திட்டம் விரைவில் நிறைவேறும்.

2 சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும்

4 வழிச்சாலையில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது விதி. இருவழிச்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மத்திய அரசு அதிகளவில் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். மதுரை-ராமநாதபுரம் இடையே உள்ள 2 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்