கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2023-10-22 17:54 GMT

லட்சுமி அலங்காரம்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவிலில் 42-ம் ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நவராத்திரி 8-ம் நாள் விழாவான நேற்று உற்சவ அம்மன் லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். நவராத்திரி 9-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) ஆயுத பூஜையையொட்டி இரவு 7.30 மணியளவில் உற்சவ அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அம்பு போடுதல் நிகழ்ச்சி

நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நிறைவுபெறுகிறது.

இதேபோல் நேற்று பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உற்சவர் மரகதவல்லி தாயார் கஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்