காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு

பள்ளிபாளையம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-04-09 18:53 GMT

பள்ளிபாளையம்

பிளஸ்-2 மாணவர்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த பருத்திப்பள்ளியை சேர்ந்தவர் அண்ணாதுரை, கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் கவுதம் (வயது 17) பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை தனது நண்பர்கள் சந்துரு, மொய்தீன் ஆகியோருடன் பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன் பேட்டையில் நடக்கும் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள சென்றனர்.

இந்தநிலையில் கொக்கராயன் பேட்டை காவிரி ஆற்றில் அவர்கள் 3 பேரும் குளிக்க சென்றனர். அப்போது கவுதம் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுதமின் நண்பர்கள் அவனது தந்தைக்குதகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

அங்கு வந்த அண்ணாதுரை, அவருடைய உறவினர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தேடினர். பின்னர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் ெகாடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கவுதமின் உடலை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மாணவரின் உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களுடன் குளிக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் இறந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்