மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டிக்கொண்டு வர வேண்டும்

கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தலைமுடியை சீராக வெட்டிக்கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.;

Update:2023-09-07 23:24 IST

உறுதிமொழி

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணைத்தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி ரவி, ஜோதிலட்சுமி ராஜ்குமார், சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கோபிநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் கலெக்டர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

காய்கறி தோட்டம்

பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஈடுபாடுடன் செயல்பட்டு இந்த பள்ளி மாநில அளவில் மிளிரும் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

மாணவர்களின் தனிப்பட்ட சுகாதாரம், பள்ளிகளில் பசுமையை அதிகரித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள், பள்ளி காய்கறி தோட்டம், மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் இல்லாத வளாகம் மற்றும் மாற்று வழிகளை நோக்கி ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்

பள்ளிகளில் இந்த திட்டத்தை சீராக செயல்படுத்த, மாவட்ட அளவிலான குழு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், வட்டார அளவிலான குழு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலும், பள்ளி அளவிலான குழுவில் தலைமை ஆசிரியரும் செயல்படுவார்கள். அனைவரும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். தலைமுடியை சரியாக வெட்டிகொண்டு வரவேண்டும். நன்றாக படிக்க வேண்டும். மாணவர்கள் இவ்வாறு ஒழுக்கமாக இருந்தால் தான் பள்ளி உயரும், நீங்களும் உயருவீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தாசில்தார் செந்தில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோடீஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்