காவேரிப்பட்டணம் அருகே, கடன் பிரச்சினையால்கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு சாவுதற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது

Update: 2023-08-07 19:00 GMT

கடன் பிரச்சினையில் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டிட மேஸ்திரி

காவேரிப்பட்டணம் அடுத்த சவுளூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, தனது மாமாவின் மோட்டார் சைக்கிளை பூமாலை நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் அடமானம் வைத்து, 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். ஆனால் கடன் தொகையை கட்டவில்லை. அதனால் விஜயகுமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் கார்த்திக்கை திட்டி அடித்துள்ளனர். இதையடுத்து கார்த்திக் குடும்பத்தினர் விஜயகுமாரிடம், 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மீதம், 5 ஆயிரத்தை சிறிது நாளில் கட்டிவிடுகிறோம் என நேற்று முன்தினம்கூறியுள்ளனர்.

ஆனால் அதையும் கேட்காத விஜயகுமார் தரப்பினர் கார்த்திக் குடும்பத்தினரை மீண்டும் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3 பேர் கைது

இந்த வழக்கை காவேரிப்பட்டணம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்ததை கண்டித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சசிகுமார் மற்றும் கார்த்திக்கின் உறவினர்கள் நேற்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இந்த தற்கொலை வழக்குடன் சேர்த்து தற்கொலைக்கு தூண்டியதாக, விஜயகுமார் (29), சிவக்குமார் (33), ராமசாமி (55) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்