குடிமங்கலம் பகுதியில் பந்தல் சாகுபடியில் சுரைக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பந்தல் சாகுபடி
உடலுக்கு குளிர்ச்சி தரும் என்ற வகையில் தமிழர் உணவில் சுரைக்காய் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் உணவுக்காக மட்டுமல்லாமல் தண்ணீர் சேமிக்கும் கலன் (சுரைக் குடுவை) உற்பத்தி செய்வதற்காக சுரைக்காய் பயன்படுத்தப்பட்டது.
தற்போது உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சுரைக்காய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பயன்பாடு குறைந்து போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது.
ஆனாலும் குடிமங்கலம் பகுதியில் பந்தல் சாகுபடியில் சுரைக்காய் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயற்கை முறை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும். ரசாயன உரங்களைப்பயன்படுத்தி சாகுபடி செய்வதை விட இயற்கை முறையில் அதிக மகசூல் ஈட்ட முடியும்.
பொதுவாக சுரைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படும். எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்வது எளிதானதாக இருக்கும்.
சுரைக் கொடிகளை தரையில் படர விட்டும், குச்சிகளை ஊன்றி அதன் மீது படர விட்டும், பந்தல் அமைத்தும் சாகுபடி செய்யலாம்.பல கிராமத்து வீடுகளில் கூரையின் மீது சுரைக் கொடியை படர விடுவதும் உண்டு.
ஆனால் பந்தல் சாகுபடி தவிர்த்த மற்ற முறைகளில் மழை, ஈரப்பதம் போன்றவற்றால் மகசூல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பந்தல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதுடன் செடிகளின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.
ஆரம்ப கட்டங்களில் பந்தல் அமைக்க அதிக அளவில் செலவு பிடிக்கும் என்பதால் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை.
ஆனால் ஒரு முறை பந்தல் அமைத்தால் பல ஆண்டுகள் அதனை பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைக்க மானியம் வழங்கி வருகிறது.
மேலும் சுரைக்காய் மட்டுமல்லாமல் பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்ட முடியும்.
வீரிய ஒட்டு ரகங்கள்
நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்யும் போது ஆண்டுக்கு ஒரு பட்டத்தில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது பல வீரிய ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டு முழுவதும் சுரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சுரை சாகுபடி தொடங்குவதற்கு முன் நிலம் தயாரிப்பு முக்கிய இடம் பிடிக்கிறது.
கடைசி உழவின் போது தொழு உரம் இடுவது நல்ல மகசூல் கிடைக்க வழிவகை செய்யும். சுரை சாகுபடியில் பூக்கள் தோன்றிய 3 மாதத்திலிருந்து காய்களை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 8 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.