பச்சை நிறமாக மாறிய கடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

குளச்சலில் பச்சை நிறமாக மாறிய கடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. அத்துடன் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-18 18:45 GMT

குளச்சல்:

குளச்சலில் பச்சை நிறமாக மாறிய கடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. அத்துடன் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நிறம் மாறிய கடல்

குளச்சலில் நேற்று முன்தினம் கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக திடீரென பச்சை நிறத்தில் மாறி காணப்பட்டது. மேலும் நுரையுடன் துர்நாற்றமும் வீசியது. கடலின் இந்த திடீர் மாற்றத்தால் மீனவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பொதுவாக கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் கடல் நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள கடல் நீரின் திடீர் நிறமாற்றத்துக்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்கள் செத்து மிதந்தன

இந்த நிலையில் நேற்று காலையில் கடல் நீர் பச்சை நிறத்தில் இருந்து படிப்படியாக நீலநிறத்துக்கு மாறி இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் பகுதியில் மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'கடலின் நீரோட்டத்தில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். இதில் சில நேரங்களில் மீன் குஞ்சுகள் செத்து மிதப்பது வழக்கமாக நடக்கும் ஒரு செயல்தான்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்