பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி

4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Update: 2022-06-10 16:33 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 1,806 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து  திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற இருக்கிறது. வகுப்புகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக அரசு பாடநூல் கழகத்தின் மூலம் சென்னை, ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அச்சகத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

பள்ளிகளுக்கு அனுப்பும் பணி

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தற்போது அந்தந்த கல்வி மாவட்டங்களில் இருந்து அந்தந்த பள்ளிகள் வாரியாக பாடப்புத்தகங்கள் பிரித்து அவற்றை வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்களை பெற்று அவற்றை வாகனங்களில் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் திறந்ததும் மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்