நல்லம்பள்ளியில் ஜவுளிக்கடையில் திருட்டு

Update: 2023-01-10 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூரை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் நல்லம்பள்ளியில் குடிப்பட்டி சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு முருகன் ஜவுளிக்கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் அவர் மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் கல்லாவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் ஜவுளிக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்