பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 160 ஆடுகள் திருட்டு

பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 160 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-06-10 21:05 GMT

சமயபுரம்:

ஆடுகள் திருட்டு

சிறுகனூர் அருகே உள்ள அழுந்தலைப்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ்(வயது 45). இவருக்கு சொந்தமாக 160 ஆடுகள் உள்ளன. தினமும் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச்செல்லும் ரெங்கராஜ் பின்பு அவருடைய தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை காணவில்லை. இதையடுத்து 160 ஆடுகளும் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர். மேலும் 160 ஆடுகளையும் லாரி அல்லது வேன் போன்ற வாகனங்களில் மர்மநபர்கள் ஏற்றிச்சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்