திருமண விழாவில் 200 மொய் கவர்கள் திருட்டு

சிதம்பரத்தில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் 200 மொய் கவர்களை திருடி விட்டு தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-20 18:45 GMT

சிதம்பரம்

பா.ம.க. பிரமுகா்

சிதம்பரம் அருகே உள்ள கொங்கரன்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் பா.ம.க ஒன்றிய செயலாளர் குமரவேலு. இவரது தம்பியின் திருமணம் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

அப்போது திருமணத்தில் அன்பளிப்பாக கொடுத்த மொய் கவர்களை வாங்கி மணமகன் அறைக்குள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மொய் கவர்கள் வைத்திருந்த இடத்தில் பார்த்தபோது அவற்றை காணவில்லை. அதை நோட்டமிட்ட மர்ம நபர் யாரோ அவற்றை திருடிச்சென்று விட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணமகன் வீட்டார் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தபோது சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர் மணமகன் அறைக்குள் சென்று அங்கிருந்த 200 மொய்கவர்களை திருடி சென்றது தெரியவந்தது.

உடனே மணமகனின் உறவினர்கள் அவரை தேடிப்பிடித்து விசாரித்தபோது அவர், திருடிய மொய் கவர்களை அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து வைத்துள்ளதாக கூறினார். தொடர்ந்து சாமுவேல் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து குமரவேல் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாமுவேலுவை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்