வீட்டின் பூட்டை உடைத்து7 பவுன் நகை-ரூ.60 ஆயிரம் திருட்டு

அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை-ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-19 17:57 GMT

வீட்டின் பூட்டு உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் களப்பக்காடு முதல் வீதி தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் யோகேஷ் (வயது 31). என்ஜினீயர். இவரது தந்தை முருகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தந்தையை பார்ப்பதற்காக கடந்த 11-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு யோகேஷ் சென்றிருந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் யோகேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து யோகேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு கூறினர்.

நகை-பணம் திருட்டு

இதையடுத்து அங்கிருந்து யோகேஷ் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம், அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்