வீடியோவை காட்டியும் மிரட்டல்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம் - ஓட்டல் ஊழியர் கைது

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-01 06:58 GMT

செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான், ஓட்டலில் வேலை செய்து வருகிறேன். மேலும் அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கி கொடுத்து வந்தேன். அதேபோல் சோழவரத்தில் உள்ள ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்யும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 47) என்பவருக்கும் கடன் வாங்கி கொடுத்தேன்.

ஆனால் சுரேஷ்குமார் வாங்கிய கடனுக்கு தவணை தொகையை சரியாக கட்டவில்லை. தவணை தொகையை கட்டும்படி அவரிடம் அடிக்கடி அறிவுறுத்தி வந்தேன்.

இந்தநிலையில் சுரேஷ்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொத்த தவணையையும் செலுத்தி விடுவதாகவும், நேரில் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார். இதனால் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அப்போது சுரேஷ்குமார், எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை குடித்து விட்டு நான் மயங்கிவிட்டேன். என்னை பாலியல் பலாத்காரம் செய்த சுரேஷ்குமார், அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து இருந்தார்.

அதன்பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி பலமுறை எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், பணமும் கேட்டு மிரட்டினார். அதற்கு மறுத்ததால் அந்த வீடியோைவ எனது குடும்பத்தினருக்கு அனுப்பினார். எனவே சுரேஷ்குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இதுபற்றி அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்து வந்த சுரேஷ்குமாரை செல்போன் சிக்னலை வைத்து ரெட்டேரி அருகே போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்