திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
வைத்தீஸ்வரன் கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்;
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில்- மயிலாடுதுறை சாலையில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன், கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெண்கள் வரிசையாக அமர்ந்து குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணைத் தலைவர் அன்புச்செழியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.