தொல்காப்பியம், செம்மொழி தமிழ் குறித்த சர்வதேச கருத்தரங்கம்: இணையவழியில் 2 நாட்கள் நடக்கிறது
'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26-ந் தேதிகளில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.;
கோப்புப்படம்
சென்னை, -
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையும், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மொழிகள் பள்ளி, மொழிக்கல்வி மற்றும் மொழி தொழில்நுட்பப்புலமும் இணைந்து 'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26-ந் தேதிகளில் சர்வதேச கருத்தரங்கத்தை நடத்துகிறது.
இந்த 2 நாள் கருத்தரங்கம் இணையவழி வாயிலாக நடைபெற உள்ளது. 25-ந் தேதி நடைபெறும் தொடக்கவிழாவில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முகமது குல்ரெஸ், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். இதில் ஜெப்னா பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் சண்முகதாஸ், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சாந்தினிபி, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பேராசிரியர் நிஷாத் பாத்திமா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இதில் மலேசியா, ஜெர்மனி, தான்சானியா ஆகிய உலக நாடுகளில் இருந்து 12 பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொல்காப்பியம் மற்றும் செம்மொழித்தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்புகள் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர். வருகிற 26-ந் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத்தலைவர் மிர்ஷா அஸ்மெர் பெக் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக இந்தி துறையின் தலைவர் முகமது ஆசிக் அலி கவுரவ விருந்தினராக கலந்துகொள்கிறார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனப்பதிவாளர் புவனேஸ்வரி வாழ்த்துரை வழங்க உள்ளார்.