குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாக குளியல் போட்டனர்.

Update: 2023-07-27 18:45 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்வதுடன், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த இதமான சீசனை அனுபவிப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். வார விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் அருவிக்கரைகளில் குவிகின்றனர்.

விடுமுறை நாள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குற்றாலம் அருவிக்கரைகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாக குளியல் போட்டனர்.

குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது லேசான வெயில் அடித்தது. சாரல் மழை பொழியவில்லை. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்