பழங்குடியின மாணவர்கள் செவிலியர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பழங்குடியின மாணவர்கள் செவிலியர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-08 18:45 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொதுமருத்துவம் மற்றும் மருத்துவச்சி, அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு செவிலியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொதுமருத்துவம் மற்றும் மருத்துவச்சி, அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை

இதற்கு அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு இணையதளம் வழியாக நடைபெறும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 'பைன்' எனப்படும் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள். இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணையவழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும், பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணமும் வழங்கப்படும்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்