லாரி-கார் மோதல்; குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த வாலிபர் பலி

தென்காசி அருகே லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-13 18:45 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் ஸ்ரீராம் (வயது 32). இவரும், அவரது நண்பர்கள் துரைமுருகன் (31), கார்த்திக் குமார் (28) ஆகியோரும் நேற்று முன்தினம் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் இங்குள்ள அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர். பின்னர் அவர்கள் காரில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை துரைமுருகன் ஓட்டினார்.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தென்காசி அருகே உள்ள நயினாரகரம் பகுதியில் சென்றபோது, இவர்களது காரும், எதிரே வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆய்க்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்ரீராமை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். துரைமுருகன், கார்த்திக் குமார் ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வேல்கனி விசாரணை நடத்தி வருகிறார். லாரி-கார் மோதிக்கொண்ட விபத்தில் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்