சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் - பள்ளி மாணவன் பலி

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.

Update: 2022-06-29 10:25 GMT

சிவகிரி,

நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் மருதாச்சலம் (வயது 41). இவர் கடந்த பத்தாண்டுகளாக சிவகிரி லால்பகதூர் தெருவில் தங்கி ஓட்டுநராகப் பணி செய்து வருகிறார்.

இவருக்கு 3 மகன்கள், இதில் மூத்த மகன் கிரண் (16). சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் கிரண் இன்று காலை 7 மணிக்கு அம்மன் கோவிலில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த தன் தம்பியை வீட்டுக்கு அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

மாணவன் சந்தைமேடு என்னுமிடத்தில் வந்த போது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மாணவன் கிரணுக்கு பின்னால் வந்த டெம்போ மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவன் கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்