கூடலூரில் வாகன போக்குவரத்து குறைந்தது

சுற்றுலா பயணிகள் வருகை சரிந்ததால் கூடலூரில் வாகன போக்குவரத்து குறைந்தது.

Update: 2023-07-15 20:30 GMT

கூடலூர்

சுற்றுலா பயணிகள் வருகை சரிந்ததால் கூடலூரில் வாகன போக்குவரத்து குறைந்தது.

கோடை சீசன்

கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர். கடந்த மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், கோடை சீசன் காரணமாகவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.

இதனால் 3 மாநிலங்கள் இணையும் கூடலூரில் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் திணறியது. சில நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்வதையும் காண முடிந்தது.

கனமழை

இது மட்டுமின்றி சீசன் இல்லாத சமயத்திலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படும்.

ஆனால் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக கேரளா உள்பட வெளி மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ந்த காலநிலை பரவலாக காணப்படுகிறது.

வெறிச்சோடிய சாலைகள்

இதன் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு சரிந்துள்ளது. வார இறுதி நாளான நேற்று சுற்றுலா வாகன போக்குவரத்து குறைந்து கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோழிக்கோடு, வயநாடு உள்பட கேரள மாநிலத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்