கோவில் யானைகளை கால்நடை, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் உள்ள யானைகளை கால்நடை டாக்டர்கள், வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-20 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் உள்ள யானைகளை கால்நடை டாக்டர்கள், வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவையாம்பாள் யானை

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவிலில் அவையாம்பாள் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் உடல்நலம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து மாவட்ட வன அதிகாரி யோகேஷ்குமார் மீனா தலைமையில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்ட குழு உறுப்பினர் சிவகணேசன், சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப்டேனியல், வனவர் கண்ணதாசன் மற்றும் கால்நடை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று அவையாம்பாள் யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது யானையின் உடல் ஆரோக்கியம், யானையின் வெளிதோற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் யானையை நடக்க விட்டும் ஆய்வு செய்தனர்.

உணவு முறைகள்

தொடர்ந்து யானைக்கு அளிக்கப்படும் உணவு முறைகள் குறித்தும், அதன் ஆரோக்கியம் குறித்தும் பாகனிடம் கேட்டறிந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் யானைக்காக பராமரிக்கப்படும் ஆவணங்களையும் குழுவினர் பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

இதேபோல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அபிராமி யானையை கால்நடை டாக்டர்கள், வனத்துறை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதி்ல் யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்தனர். யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பாகனிடம் குழுவினர் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது கோவில் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்