வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண், மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-14 03:46 GMT

செங்குன்றம் காந்தி நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 52). இவருடைய மகன் ராஜா(23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மாதவரத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

செங்குன்றத்தை அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் வேகமாக வந்து ஏறி இறங்கியபோது, மோட்டார்சைக்கிளில் இருந்து தனலட்சுமி தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி, மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த மேடவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (21). இவர், அதே தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து வேளச்சேரி மெயின் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னால் உட்கார்ந்து வந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கோபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்