இளம்பெண் மர்ம சாவு

திருவோணம் அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் மர்மமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்தார்.

Update: 2023-04-28 20:43 GMT

தஞ்சாவூர், ஏப்.29-

திருவோணம் அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் மர்மமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்தார்.

திருமணம்

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள அதம்பை தெற்கு நேதாஜி நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி காந்திமதி. வேலு, சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். காந்திமதி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவர்களின் மகள் கலைவாணி(வயது 18). இவருக்கும், மதுரை வண்டியூரை சேர்ந்த ஜெயராஜ் மகன் சிவா(25) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

படுக்கையில் பிணமாக கிடந்தார்

கலைவாணியின் சொந்த ஊரான அதம்பை கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கலைவாணியும், அவரது கணவர் சிவாவும் கடந்த 26-ந்தேதி இரவு அதம்பை கிராமத்துக்கு வந்தனர். கோவில் விழாவுக்கு சென்று விட்டு அன்று இரவு கலைவாணியின் பாட்டி அய்யம்மாள் வீட்டில் கலைவாணியும், சிவாவும் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் கலைவாணி படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கொலை செய்யப்பட்டாரா?

கலைவாணியுடன் தூங்க சென்ற அவரது கணவர் சிவா மாயமாகி விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாட்டாத்திக்கோட்டை போலீசார் கலைவாணியின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கலைவாணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவில் மர்மம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாயமான அவரது கணவர் சிவாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்