மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியல்

பனங்குளம் தெற்கு கிராமத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-20 18:47 GMT

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு கடந்த மாதம் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தன்னார்வலர்கள் மூலம் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மூலம் வீடு, வீடாக சென்று சரிபார்க்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முதல் உரிமைத்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி முன்னதாகவே முதற்கட்டமாக சோதனைக்காக வங்கி கணக்கில் 1 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான குறுஞ்செய்திகள் அவர்களது செல்போன்களுக்கு வந்தது. ஏராளமானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த 14, 15-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசின் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவானது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கப்பெறவில்லை. இதனால் வங்கிகளுக்கும், வருவாய்த்துறை அலுவலகங்களுக்கும் பலர் அலைந்துள்ளனர். இந்த நிலையில் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு என்ன காரணத்திற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை இணையதளத்தில் பார்த்து 30 நாட்களுக்குள் சரி செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தில் ஏராளமான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் விண்ணப்பங்களை இணைய தளத்தில் சரிபார்த்து திருத்தம் செய்தால் உடனே சரியாகும். உரிமைத் தொகை கிடைக்கும் என்று கூறியதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்னர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்