உறையூர் டாஸ்மாக் பாரில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை - மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

உறையூர் டாஸ்மாக் பாரில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை மது போதையில் நண்பர்கள் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-09 19:44 GMT

திருச்சி:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் பாலாஜி நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரண்ராஜ் (வயது 35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் இன்று உறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டு வந்துள்ளார். அப்போது அவரது பழைய நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதையடுத்து சரண்ராஜ் மற்றும் 4 நண்பர்களுடன் மாலை சுமார் 5 மணி அளவில் உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தினர். பின்னர் நேரம் செல்ல செல்ல அவர்களுக்கு மது போதை தலைக்கேரியது.

இதில் நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்பு ஒருவருக்கு ஒருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இதனை பார்த்த பார் ஊழியர்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரண்ராஜின் கழுத்தில் குத்தினர்.

இதில் படுகாயத்துடன் கடையை விட்டு வெளியே வந்த சரண்ராஜ் சாலையில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி உறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் போலீசார் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், காந்தி மார்க்கெட் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் போலீசார் சந்தேகத்தின் பேரில் உறையூர் நாச்சியார் பாளையம் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை அடையாளம் கண்டு அவரை தேடி வருகிறன்றனர். இந்த கொலை சம்பவம் உறையூர் பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்