மாற்று அரசியல் வந்தால்தான் ஆட்சியின் தரம், நிறம் மாறும் கமல்ஹாசன் பேச்சு

மாற்று அரசியல் வந்தால்தான் ஆட்சியின் தரம், நிறம் மாறும் என்று மடத்துக்குளத்தில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2021-03-17 22:20 GMT
திருப்பூர், 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் ம.நீ.மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அதன்படி உடுமலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்து பிரசார வாகனத்தின் மூலம் மடத்துக்குளம் சென்ற கமல்ஹாசன் வேட்பாளரை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தரம், நிறம் மாறும்

ஒரு மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். சாதாரணமானவர்கள், மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரு சந்தர்ப்பம். ஒரு மாற்று அரசியலை விதைக்கும் இடத்தில் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள்.

இந்த செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஒரு மாற்று அரசியல் வந்தால் தான் ஆட்சியின் தரம் மாறும், நிறம் மாறும்.

ஒரே குறிக்கோளுடன்...

எங்கள் திட்டங்களை எல்லாம் எடுத்துச்செல்ல இவர் இருக்கிறார். நாங்கள் நல்ல திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறோம். அறிவார்ந்தவர்களை வைத்து திட்டங்களை வகுத்திருக்கிறோம். இப்படி திட்டம் போட்டு பழகிய பல அதிகாரிகள் எங்களுடன் இருக்கிறார்கள்.

தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் வந்திருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கை மேம்பட நல்ல திட்டங்கள் வகுப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த போட்டுக்கொள்ளும் திட்டங்கள் இனி இருக்காது. அப்படி நீங்கள் நல்ல முடிவை எடுத்துவிட்டால் நாளை நமதாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்