பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிப்போம்: ஈரான் எச்சரிக்கை
பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிப்போம் என்று ஈரான் ராணுவ ஜெனரல் மேஜர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெஹ்ரான்,
எல்லையில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடாவிட்டால் பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்போம் என்று ஈரான் ஆயுதப்படை தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில வாரங்களுக்கு முன் ஈரான் நாட்டைச்சேர்ந்த 10 எல்லைப் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகினர். ஜைஷ் அல் அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் எல்லையிலிருந்து தாக்குதல் நடத்தியதே வீரர்கள் உயிரிழப்பு காரணம் என்று ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஈரான் ராணுவ மேஜர் ஜெனரல் மொகமது பக்கேரி பேசுகையில், “இத்தகைய செயல்கள் தொடர்வதை நாங்கள் இனியும் அனுமதிக்க முடியாது. எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளை கைது செய்து அவர்களின் முகாம்களை அழிக்க வேண்டும். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் நாங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பாதுகாப்பு புகலிடங்களை தேடி அழிக்க வேண்டிவரும்” என்று எச்சரித்தார்.