ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியிருப்பதாக தகவல்

இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரேபிய குடியுரிமை வழங்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Update: 2017-05-20 05:46 GMT
மும்பை,

வங்காளதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, இந்தியாவை சேர்ந்த மத பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் பிரசாரத்தால், தான் தூண்டப்பட்டதாக தெரிவித்தான். இதையடுத்து, ஜாகீர் நாயக்குக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டது. அவர் நடத்தி வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டது. ஜாகீர் நாயக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு ஜாகீர் நாயக்கிற்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. 

இருப்பினும் ஜாகீர் நாயக் இந்தியா திரும்புவதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சவூதி அரேபியாவில் உள்ள ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. சர்வதேச போலீசால் ஜாகீர் நாயக் கைது ஆவதை தவிர்க்கும் வகையில் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலையிட்டு குடியுரிமை வழங்கியதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்