சவுதியில் அரசுக்கு எதிராக போராடிய ஊனமுற்ற வாலிபருக்கு மரண தண்டனை உறுதி செய்யபட்டது

சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உடல் ஊனமுற்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

Update: 2017-05-29 11:41 GMT
சவுதி அரேபியாவில் கடந்த 2012-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று நடந்தது. இப்போராட்டத்தில் உடல் ஊனமுற்றவரான முனிர் அல் ஆடம் (23) என்பவரும் பங்கேற்றுள்ளார்.

போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அப்போது, போலீசாரால் கைது செய்யப்பட்ட உடல் ஊனமுற்ற முனிர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு இவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இத்தீர்ப்பிற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.முனிர் உடல் ஊனமுற்றவர் என தெரிந்திருந்தும் அவரை போலீசார் கடுமையாக சித்ரவதை செய்ததற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்நிலையில் வாலிபரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம் வாலிபரின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் சவுதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்பும் சவுதியின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

வாலிபரின் மேல் முறையீட்டு வழக்கும் தள்ளுடி ஆனதால் சவுதி மன்னரான சல்மானுக்கு பொது மன்னிப்பு கோரி வாலிபர் கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்