இந்தியாவை குற்றம் சாட்டுவதாக ஐ.நா.வில் அவமானப்பட்ட பாகிஸ்தான்!

இந்தியாவை குற்றம் சாட்டுவதாக பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் வைரலாக பரவி வருகிறது.

Update: 2017-09-24 11:29 GMT

நியூயார்க்,

ஐ.நா.சபையில் இந்தியாவை விமர்சனம் செய்வதாக அந்நாட்டு தூதர் மல்லிகா லோகி ‘இதுதான் இந்திய ஜனநாயகத்தின் முகம்!’ என வெளியிட்ட புகைப்படமானது, பாகிஸ்தானின் பொய்யை உறுதிசெய்ய இதைவிட எந்தஒரு ஆவணமும் தேவையில்லை என்பத போன்றாகி உள்ளது. 

நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கடந்த வியாழக்கிழமை உரையாற்றுகையில்  இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நேற்று ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்தார். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது, பயங்கரவாத பூமியாக இருப்பது பற்றி பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிலடி கொடுத்தார். சுஷ்மா பேச்சுக்கு சபையிலே பாராட்டு முகம் காணப்பட்டது. சுஷ்மா சுவராஜின் பதிலடி உரைக்கு பதிலளித்து பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் மல்லிகா லோகி, இந்தியா தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் தாயகம் என்றார். 

மல்லிகா லோகி பேசுகையில் ‘இதுதான் இந்திய ஜனநாயகத்தின் முகம்!’ என புகைப்படம் ஒன்றை ஐ.நா.வில் வெளிக்காட்டினார். ஆனால் புகைப்படத்தில் இடம்பெற்று இருந்த பெண் காஷ்மீரை சேர்ந்தவர் கிடையாது. பெல்லட் துப்பாக்கி சூட்டால் காயப்பட்ட பெண் கிடையாது. காயம் அடைந்த பெண் 17 வயது ராவ்யா அபு ஜோம் ஆவார். காசாவில் 2014-ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காயம் அடைந்தவர். இந்த புகைப்படமானது புகைப்பட கலைஞர் லெவினால் எடுக்கப்பட்டது, கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்காக  பணியாற்றி வருபவர். மல்லிகா லோகி இந்த புகைப்படத்தை காட்டி காஷ்மீரில் நடந்தது என கூறியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது கிடையாது என கடுமையான விமர்சனங்களுடன் புகைப்படம் பரவி வருகிறது. டுவிட்டரில் மல்லிகா லோகியை டேக் செய்து விமர்சனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் அனைத்து அரசு சமூக வலைதள பகுதிகளிலும் மல்லிகா லோகி புகைப்படத்துடன் பேசிய காட்சிகள், ‘காஷ்மீரில் எடுக்கப்பட்ட காட்சி’ என குறிப்பிட்டு தகவல் பகிரப்பட்டது. காஷ்மீரில் புர்கான் வானி கொல்லப்பட்டதற்கு இரு வருடங்களுக்கு முன்னதாக காசாவில் நடைபெற்ற சம்பவத்தின் புகைப்படத்தை காட்டி உலக அரங்கில் பொய் உரைத்து உள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தானின் தூதர் மல்லிகா லோகி முன்னாள் பத்திரிக்கையாளர் கூட. உண்மையை ஆய்வு செய்யாமல், உலக அரங்கில் புகைப்படத்தை காட்டி விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார். 


காசாவில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் 2014 ஆண்டு  தி கார்டியனில் வெளியாகியிருந்தது.

மேலும் செய்திகள்