அபுதாபியில் எகிப்து நாட்டின் குண்டு பெண் மரணம் மும்பையில் சிகிச்சை பெற்றவர்

அபுதாபியில் எகிப்து நாட்டின் குண்டு பெண் மரணம் மும்பையில் சிகிச்சை பெற்றவர்

Update: 2017-09-25 22:45 GMT
கெய்ரோ,

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது. இவருக்கு 11 வயது ஆனபோது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் அவர் மிகவும் குண்டானார்.

படுக்கையிலேயே சுமார் 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை 504 கிலோவாக உயர்ந்தது. உலகிலேயே மிகவும் குண்டான பெண் இவர்தான் என கூறப்பட்டது.

எமான் தனது உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை வந்தார். அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 3 மாதம் தங்கியிருந்து தீவிர சிகிச்சைப்பெற்றார். இதன் மூலம் அவரது உடல் எடை 504 கிலோவில் இருந்து 242 கிலோவாக குறைந்தது.

அதனை தொடர்ந்து அடுத்தகட்ட சிகிச்சைக்காக எமான், மும்பையில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்றார். அங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 20 மருத்துவர்களை கொண்ட மருத்துவ குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும், அவர் சிறுநீரக செயல் இழப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில், நேற்று அதிகாலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. எமான் அகமது கடந்த வாரம்தான் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்