ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆஜர்
பனாமாகேட் மோசடி தொடர்பாக ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆஜர் ஆனார்.
இஸ்லமபாத்,
பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப் இன்று ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள மாட்டார் என்று கடந்த சில வாரங்களாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.
இஸ்லமாபாத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார். நவாஸ் ஷெரீப் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
நவாஸ் ஷெரீப் தன் மீதான மூன்று குற்றச்சாட்டுக்களையும் தொடர்ந்து மறுத்தார். தான் எந்த தவறையும் செய்யவில்லை என்று வாதிட்டார். அதேவேளையில், அக்டோபர் 2 ஆம் தேதி நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று தேசிய பொறுப்புடமை அமைப்பு தெரிவித்தது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. லண்டனில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவியை காண்பதற்காக இங்கிலாந்து சென்ற நவாஸ் ஷெரீப், நேற்று தான் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.