எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல், 235 பேர் உயிரிழப்பு

எகிப்தில் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 235 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-11-24 14:42 GMT
கெய்ரோ,

வடக்கு செனாய் பகுதியில் பிர் அல்-அபேத்தில் அல்-ரவுடாக் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்தனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மக்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.  பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தனர் எனவும் 75 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நகரில் ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்ற வண்ணம் உள்ளது. 125-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்து உள்ளது என அந்நாட்டு மீடியா தகவல்கள் வெளியாகி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. பயங்கரவாதிகள் ஆம்புலன்ஸை நோக்கியும் துப்பாக்கி சூடு நடத்தினர் எனவும் உள்ளூர் மக்கள் கூறிஉள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அவசர ஆலோசனையை நடத்துகிறார். 

எகிப்து வரலாற்றில் மிகவும் கொடூரமான தாக்குதலாக பார்க்கப்படும் இத்தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
 

மேலும் செய்திகள்