அமெரிக்காவில் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்தியர், மரண தண்டனையில் இருந்து தப்புகிறார்?

அமெரிக்காவில் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்தியர், மரண தண்டனையில் இருந்து தப்புகிறார்?

Update: 2018-01-12 22:15 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ‘எச்-1 பி’ விசா பெற்று சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றியவர், ரகுநந்தன் யண்டமூரி (வயது 32). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், சூதாட்ட பழக்கம் உடையவர் என்றும், அதனால் பெரும்தொகை கடன்பட்டார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் அவர் பணத்துக்காக சத்யவதி (61) என்ற மூதாட்டியையும், பிறந்து 10 மாதமே ஆன அவரது பேத்தி சான்வியையும் 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ந் தேதி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விசாரணை நீதிமன்றம் 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. அந்தத் தீர்ப்பை பென்சில்வேனியா ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உறுதி செய்தது.

இதையடுத்து அவருக்கு அடுத்த மாதம் 23-ந் தேதி விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகின. இப்போது அவர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பி விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பென்சில்வேனியா மாகாண கவர்னர், அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை 2015-ம் ஆண்டு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்து இருப்பதே இதற்கு காரணம்.

இதுபற்றி அந்த மாகாண சிறைத்துறை தகவல் தொடர்பு இயக்குனர் சூ மெக்நாட்டன் கூறும்போது, “எந்த ஒரு கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றத்தை கோர்ட்டு நிறுத்தக்கூடாது என கவர்னர் சொல்லி உள்ளார். இது தொடர்பாக அவர் உத்தரவு பிறப்பிப்பார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் இதை சொல்லிக்கொள்கிறேன்” என்றார். பென்சில்வேனியாவில் கடந்த 20 ஆண்டுகளாக யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்