பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை மந்திரி சபை மாற்றியமைப்பு

இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசை அமைத்துள்ளன.

Update: 2018-02-25 22:00 GMT

கொழும்பு,

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து தேசிய அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பிரதமர் ரணிலை நீக்கிவிட்டு தனது கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க சிறிசேனா முயன்று வருகிறார். ஆனால் அவரது கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது.

இந்த பரபரப்புக்கு இடையே நேற்று அவர் மந்திரி சபையை மாற்றியமைத்தார். இதில் பிரதமர் ரணிலிடம் சட்டம் ஒழுங்கு துறை வழங்கப்பட்டது. மேலும் அவரது கட்சியை சேர்ந்த பல மந்திரிகளின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. மக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிசேனா கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்துள்ள செய்தியை கருத்தில் கொண்டு, மக்கள் சேவையாற்றுவதற்காக அரசு தனது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்