இலங்கையில் வன்முறை: அமைதி திரும்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை

இலங்கையில் வன்முறையான சூழல் நிலவும் நிலையில், அமைதி திரும்ப வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #SriLankaemergency

Update: 2018-03-08 01:39 GMT
கொழும்பு,

இலங்கையின் மத்திய கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை இனத்தவராக உள்ள இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 பேர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.

இதன்காரணமாக தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டது. இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில்,  நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 3-வது நாளாக  நெருக்கடி நிலை அங்கு நீடிக்கிறது. தொடர்ந்து கண்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. மொபைல் இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான சனத் ஜெயசூர்யா, குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தனது அடுத்த தலைமுறை உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்படுவதை தான் விரும்பவில்லை . என்று மஹில ஜயவர்த்தன கூறியுள்ளார். 25 வருடம் தொடர்ந்த ஒரு போருக்கு உள்ளாகவே தான் வளர்ந்ததாக தெரிவித்துள்ள  ஜயவர்த்தனே, சமீபத்திய வன்செயல்களை தான் கடுமையாக கண்டிப்பதுடன், அதற்கு காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதே போல், குமார் சங்ககாரா கூறியிருப்பதாவது, நாம் அனைவரும் ஒரே நாடு மற்றும் ஒரே மக்கள் என்ற கொள்கையை சேர்ந்தவர்கள். அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்பதே நமது பொதுவான மந்திரமாக இருக்க வேண்டும். வன்முறை மற்றும் இனவெறி தாக்குதலுக்கு இங்கு இடமில்லை. வன்முறைக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்