சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. #Facebook #MarkZuckerberg

Update: 2018-04-26 05:41 GMT
நியூயார்க்,

சமூக வலைதளங்களில் மிகப்பிரபலம் பெற்றது பேஸ்புக் தான். உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான  பயனாளர்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.  இந்த நிறுவனம், விளம்பரம் உள்ளிட்டவை பல்வேறு வருவாய் ஆதாரங்கள் மூலம் பில்லியன் டாலர் கணக்கில் வருவாயை அள்ளுகிறது. ஆனால், அண்மையில் , பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தகவலில் சமரசம் செய்து கொண்டதாக வெளியான தகவல் உலக முழுவதும் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பேஸ்புக் நிறுவனம் மூலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டதை பேஸ்புக் நிறுவனர் மார்க்சூகர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார். மேலும், இனிமேல், இத்தகைய தவறுகள் நடக்காத வண்ணம்  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பேஸ்புக் நிறுவனம் தனது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாக இருந்ததால், அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

ஆனால், பேஸ்புக் நிறுவனம் மீது எழுந்த இத்தகைய சர்ச்சைகள், அதன் வருவாயை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சொல்லப்போனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருவானம் 49 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 12 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. நிகர இலாபம் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. 

பேஸ்புக் நிறுவனத்தின், சிஇஒ மார்க் சூகர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு முக்கிய சவால்களை கடந்து, நமது நிறுவனம் 2018 ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது”என்று தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்