போராட்டம், உயிர் பலிகளுக்கு மத்தியில் ஜெருசலேமில் தூதரகம் திறந்தது, அமெரிக்கா
இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அங்கு தூதரகம் திறக்க இருப்பதாக கூறினார். #U.S.Embassy
ஜெருசலேம்,
ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அதை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அங்கு தூதரகம் திறக்க இருப்பதாக கூறினார். இதற்கு பாலஸ்தீனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ‘நக்பா’ தினத்தையொட்டி இஸ்ரேல் எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று ஜெருசலேமில் அமெரிக்கா தனது தூதரகத்தை திறந்தது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அதிருப்தியில் இருக்கும் பாலஸ்தீனர்களுக்கு இந்த தூதரக திறப்பு நடவடிக்கை பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே காசா எல்லைப்பகுதியில் அவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
எனவே இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 52 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2014-ல் காசா போர் முடிவடைந்த பிறகு மிகப்பெரிய அளவில் அரங்கேறி இருக்கும் இந்த வன்முறையால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.