துருக்கியில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 10 பேர் பலி

துருக்கி நாட்டின் டெகிர்டாக் வடமேற்கு மாகாணத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் படுகாயமடைந்தனர். #TurkeyTrainDerails

Update: 2018-07-09 01:35 GMT
டெகிர்டாக்,

துருக்கியிலுள்ள எடிர்னே மாகாணத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரெயில், இஸ்தான்புல் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரெயிலில் 362 பயணிகள் மற்றும் 6 ரெயில்வே ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் சரிகார் கிராமம் அருகே சென்று கொண்டிருக்கும் போது ரெயில் திடீரென கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 73 பயணிகள் படுகாயமடைந்தனர். 

டெகிர்டாக் வடமேற்கு மாகாணத்தில் நிகழ்ந்துள்ள இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பதற்காக 100 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் ஏர் ஆம்புலன்களும் அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்