துருக்கியில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

துருக்கியில் வடமேற்கே ரெயில் தடம் புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-07-09 05:30 GMT
இஸ்தான்புல்,

துருக்கியின் வடமேற்கே பயணிகள் ரெயில் ஒன்று இஸ்தான்புல் நோக்கி சென்று கொண்டிருந்தது.  இந்த ரெயிலில் 362 பயணிகள் மற்றும் 6 ரெயில்வே ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், டெகிர்டாக் பகுதியில் சரிகார் கிராமம் அருகே நேற்று மாலை ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  இதில் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.  இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  73 பயணிகள் காயமடைந்து உள்ளனர்.  இதனை துணை பிரதமர் ரிசெப் அக்தக் இன்று தெரிவித்துள்ளார்.

அவர்களை மீட்க 100 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஏர் ஆம்புலன்சுகளும் அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்