‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்

அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தி பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

Update: 2018-07-12 22:15 GMT

நியூயார்க்,

‘போர்ப்ஸ்’ வெளியிடுகிற பணக்காரர்கள் பட்டியல் உலக பிரசித்தி பெற்றது.

இப்போது ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, அமெரிக்காவில் சுயமாக உருவாகி பணக்காரர்களாகி இருக்கிற 60 பெண்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள், ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி ஆவார்கள்.

57 வயதான ஜெயஸ்ரீ உல்லால், லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற கம்ப்யூட்டர் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

இவருடைய நிறுவனம் கடந்த ஆண்டு 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10,880 கோடி) வருவாய் ஈட்டி இருக்கிறது.

63 வயதான நீரஜா சேத்தி, சின்டெல் என்ற தகவல் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார். இவர் கணவர் பரத் தேசாயுடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 924 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,283 கோடி) சம்பாதித்து இருக்கிறது.

‘போர்ப்ஸ்’ பட்டியலில் ஜெயஸ்ரீ உல்லாலுக்கு 18–வது இடமும், நீரஜா சேத்திக்கு 21–வது இடமும் கிடைத்து உள்ளது.

மேலும் செய்திகள்