இங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி கைது

இங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2018-07-14 05:20 GMT

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேத் தம்பதியின் மூத்த மகன் ஜார்ஜ் (வயது 4).  கடந்த மாதத்தில் தென்மேற்கு லண்டனில் உள்ள பள்ளி கூடத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், இளவரசர் ஜார்ஜை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.  அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்தின் லன்காஷைர் நகரில் நெல்சன் பகுதியை சேர்ந்தவர் உஸ்னைன் ரஷீத் (வயது 32).  இவர் கடந்த அக்டோபரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் குழு சாட்டிங்கில் ஈடுபட்டு உள்ளார்.

அதில், இளவரசர் ஜார்ஜை கொல்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  தொடர்ந்து ஜார்ஜின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் இளவரசருடன் இரண்டு முகமூடி அணிந்த ஜிகாதி போராளிகள் இருப்பது போன்று வடிவமைத்து உள்ளார்.

தொடர்ந்து, அரச குடும்பம் கூட விட்டு வைக்கப்படாது என அதில் பதிவிட்டுள்ளதுடன், பள்ளி கூடம் விரைவில் தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் ரஷீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்வது மற்றும் தீவிரவாதத்தினை ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரஷீத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

போலீசாரின் விசாரணையில் ஐ.எஸ். அமைப்பிற்காக போரிட சிரியாவுக்கு செல்ல ரஷீத் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்