குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்கிறது பாகிஸ்தான்

குல்பூஷன் ஜாதவ் வழக்கு தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் இன்று பதில் மனு தாக்கல் செய்கிறது. #KulbhushanJadhavcase

Update: 2018-07-17 04:22 GMT
இஸ்லமாபாத்,

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்த்தாகவும் பயங்கரவாத  நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 

பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் இந்தியா தரப்பில், கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாகப் பதிலளிக்க பாகிஸ்தானுக்கு ஜூலை 17-ம் தேதி வரை சர்வதேச நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. இந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இன்று பதில் மனு தாக்கல்செய்ய உள்ளது. இதை பாகிஸ்தானின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. 

மேலும் செய்திகள்